Tuesday, October 15, 2013

குட்டி யானைக்கு இரும்புச் சங்கிலி

நம்மை மீறிடும்
சக்திப் பெற்ற யானையைக்
குட்டியாய் இருக்கையில்
கனத்தச் சங்கிலியால்
பிணைத்துப் பழக்குதல்
பின்னாளில் அதனை
மிகச் சரியாய்ப் பயன்படுத்த உதவுதல்போல்

வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்

அறிவுதான் அனைத்துமாயினும்
அதுவே கூர் ஆயுதமாயினும்
அதுதன் திறமதை முழுதும் அறிதலுக்கு
மடத்தனமான நம்பிக்கைகளே உதவுமாயின்
குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பகுத்தறிவே அனைத்துமாயினும்
அதுவே மனிதனுக்கான அடையாளமாயினும்
பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?

29 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா

வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்

அறிவுக்கு விருந்தாக அமைந்த கவிதை எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி--
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் said...

ஆன்மீகத்தோடு கூடிய நல்லறிவே சிறந்தது .அதுவே வாழ்வை நன்னெறிப் படுத்தவும் உதவிடும் .சிறந்த நற் கருத்தோடு விளைந்த
கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா .

ராஜி said...

ஆன்மீகம் அவசியம்தான். ஆனா, அது மூடநம்பிகையை வளர்க்காம இருந்தால் நல்லது

சசிகலா said...

ஆன்மீகம் என்பது ஆன்மாவை அமைதியுடன் வைத்திருக்க இருக்க வேண்டும் . நம்மையும் அடுத்தவரையும் வீண் பயத்தில் ஈடுபடுத்த அல்ல.. என்பது என் கருத்து.
நல்ல சிந்தனையை தூண்டும் தங்கள் பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

Anonymous said...

ஆம் அத்தனையும் தேவையென்று உருவாக்கினர் அன்று.
அதை உணராது உதறும், தறிகெட்ட இளையோரை இன்று காண்கிறோம்.
அந்த வேலிகளின் பயன் இல்லையே என வருந்துகிறோம் இன்று.
நல்ல அலசல்.-
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்:

Unknown said...

அறிவுதான் அனைத்துமாயினும்
அதுவே கூர் ஆயுதமாயினும்
அதுதன் திறமதை முழுதும் அறிதலுக்கு
மடத்தனமான நம்பிக்கைகளே உதவுமாயின்
குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பகுத்தறிவே அனைத்துமாயினும்
அதுவே மனிதனுக்கான அடையாளமாயினும்
பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?


உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்
இரமணி! சுவை, தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய அருமையான கேள்வி ஐயா...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆத்திகம் மனித வாழ்க்கைக்கும் அவசியம்தான்...

ஏன்னென்றால் மனிதனுடைய செயல்களுக்கும் அவனுடைய சிந்தனைகளுக்கும்... கொஞ்சம் வேலிபோட்டு வைத்திருப்பது இந்த ஆன்மீகம்தான்...

ஆன்மீகம் தன்னுடைய எல்லையை மீறி பயணிப்பதுதான் பகுத்தறிவாளர்களுக்கு பொருத்துக்கொள்ள முடியவில்லை...

கொஞ்சம் மூடதனத்தை ஒதுக்கிப்பார்த்தால் மனிதனை பண்படுத்த சரியான தேர்வு ஆன்மீகமே

Unknown said...

தன்னை உணர்வதை ஆன்மீகம் என்று சொல்லலாம் !

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனிதனைப் பக்குவப்படுத்த, நல்வழிப்படுத்த, நேர்மையாய் நடந்துகொள்ள வைக்க ஆன்மிக சிந்தனைகள் மட்டுமே ஓரளவுக்கு உதவியாய் இருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

சிந்திக்க வைக்கும் அருமையான ஆக்கத்திற்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

முன்னெச்சரிக்கை எப்போதும் முறைப்படுத்தும் என்பதனை அழகாய்ச் சொன்னீர்கள்!

ஸ்ரீராம். said...

உங்கள் மனதின் கேள்விகளை எங்களையும் கேட்க வைத்து விட்டீர்கள்.

Thooral said...

anaithum arumaiyanna sinthikka thoondum varigal....
//வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்//
. ennai migavum kavarntha varigal ivai

இராஜராஜேஸ்வரி said...

குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பண்படுத்தும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா!
//பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?// அழகாய்க் கோர்த்து அருமையாய்க் கவி படைத்துவிட்டீர்கள்! நன்றி ஐயா!

அருணா செல்வம் said...

குட்டி யானைக்கு இரும்பு சங்கிலி தேவைதான்.
ஆனால் வளர்ந்த பிறகு...?
கட்டுப்பாடு பசுமரத்தாணியாக பதிந்துவிட்டதால்
அதைப் பிடுங்கி எறியவும் சிலநேரம் நம்மை பயங்கொள்ள வைக்கிறது.

உங்களின் கவிதை யோசிக்க துர்ண்டுகிறது இரமணி ஐயா.

கோமதி அரசு said...

பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?//

அருமையாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.

RajalakshmiParamasivam said...

நானும் உங்கள் கட்சி தான் ரமணி சார்.
மனிதனைப் பண்படுத்த அவசியம் ஆன்மிகம்.
மிகவும் ரசித்துப் படித்தேன் பலமுறை.

இளமதி said...

மனிதனைப் பண்படுத்தத்தான் ஆன்மீகம்...
பயப்படுத்த அல்ல!

மிக அருமையான சிந்தனை ஐயா!

வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான சிந்தனை வரிகள் ஐயா.

ADHI VENKAT said...

ஆன்மீகம் நிச்சயம் அவசியம் தான். சிறப்பான வரிகள்.

Ranjani Narayanan said...

குட்டியானையை அடக்க இரும்பு சங்கிலி போல, நம் மனத்தை அடக்கி ஆள ஆன்மிகம் ரொம்பவும் அவசியம்தான். நல்ல கருத்துக்களை எளிமையாகச் சொல்லுயிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

கவியாழி said...

வசதிக்காய் வைத்துக்கொள்வோம் ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்

கே. பி. ஜனா... said...



மிக முக்கியமானதும் மிக தேவையானதுமான ஓர் கருத்தை நயமாய் சொல்லும் கவிதையை மிக மிக ரசித்தேன்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்து! சிந்திக்க வேண்டிய ஒன்று! நன்றி!

Iniya said...

பண்பட்ட மனதில் தான் நல்லெண்ணமும் அறிவு வளர்ச்சியும் வளருதல் சாத்தியம் அதற்கு
குஞ்சு வளர முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவை
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகமும் அவசியமென்று அழகாக எடுத்து சொன்னீர்கள்.
அருமையான கருத்துக்கு நன்றி வாழ்த்துக்கள்...!

மகேந்திரன் said...

பகுத்து அறிதலே
பாங்கான அறிவென
பாங்காக உரைத்தவிதம்
மிகவும் அழகு ஐயா...

Anonymous said...

ஆன்மீகமும் ஓர் அறிவே .
அதைப் பெற முற்படுதல் தெளிவே.

G.M Balasubramaniam said...

யானை குட்டியாய் இருக்கையில் காலில் சங்கிலி கட்டி அதைப் பழக்குவதுபோல் நாம் சிறுவராக இருக்கும்போதே சில நம்பிக்கைக்களுக்கு அடிமைப் படுத்தப் படுகிறோம். மனம் என்னும் நிலத்தில் சிறு வயதில் பண்படுத்தப் பட்ட கருத்துகள் என்று நம்பி அறியாமைக்கான வித்துக்கள் தூவப் படுகின்ற்ன.பகுத்தறிவு வளர்வது மிகக் கடினம். சிந்தனைகளில் சிறு மாற்றம் காண்கிறேன் ரமணி சார். வாழ்த்துக்கள்.

Post a Comment